ஆன்லைனில் புத்தகம் வாங்க

Thursday 9 January 2014

போட்டிச் சிறுகதை 119

நிழலின் சலனங்கள்:

தேவதை வீட்டினுள் தண்ணீர் எடுக்க சென்று இருக்கிறாள்.

அவள் பெயர் மைத்ரேயி, பெயரா முக்கியம்?.

அவள் நிறம் சிவப்பு,நிறமா முக்கியம்?

அவள் வயது 60,வயதா முக்கியம்?

அவள் என் பாட்டி அதுவா முக்கியம்?

அவளின் பெயரில் உள்ள சொத்துக்கள் தான் எனக்கு முக்கியம் ஆனால் அதை நான் இப்பொது காட்டிக்கொள்ள இயலாது. ஏதாவது தந்திரம் செய்து தான் அதை பறிக்க வேண்டும்.தந்திரம்  என்றாலே அன்பு காட்டுவதைப் போல் நடிப்பது தானே, அது எனக்கு வெகு இயல்பாகவே வரும்...

என்னால் என் தந்தை,தாய் காலமாகி பல ஆண்டுகள் ஆகின்றன...அட்டை பூச்சி போல கொஞ்சம் கொஞ்சமாக அவர்களை கொன்று விட்டேன்,அவர்கள் எனக்காக சேர்த்து வைத்த சொத்துக்களை எல்லாம் தின்று விட்டு, இங்கு என்ன தின்னலாம்? என வந்து இருக்கிறேன்...

என் பாட்டியின் பெயரில் ஒரு பெரிய வீடும்,ஒரு சிறு தோட்டமும் இருக்கின்றன அதுவே பல லட்சங்கள் போகும்.என்னால் சில ஆண்டுகளை குதூகலமாக ஓட்ட முடியும் அந்த பணத்தில்...

ஒரு பூனை என்னை முறைத்து கொண்டு ஓடுகிறது அது ஒரு வேளை உண்மை அறியுமோ?

'உன்ன தான் முதல்ல காலி பண்ணனும்.'

போன மாசம் இப்படி தான் ஒரு பூனை என்னை முறைச்சுது அப்போ எனக்கு எதுவுமே தோணல ஏன்னா அது ஒரு வேசி வீடு...அந்த கட்டை என்னை  பார்த்த தோரணையும், அவ எனக்கு கொடுத்த சந்தோஷமும் வார்த்தைல சொல்ல முடியாது...பேரின்பம், ஆனா என் மாச சம்பளம் 20,000 த்தையும் புடுங்கிகிட்டது பெருந்துன்பம்...

இந்த பணம்(எப்படியும் 40 வரும்) வந்த உடனே முதல்ல அவகிட்ட போகணும். அப்புறம் மறுபடி மறுபடி போகணும்!...சொர்கத்த பாக்கணும்!...அதுக்கு என் பாட்டி முதல்ல மனசு வைக்கணும்...

"பாட்டி,என் செல்லம் தண்ணி எடுக்க இவ்வளவு நேரமா? சீக்கிரம் வா... உன்ன பாக்க தான் ரெயில் ஏறி வந்து இருக்கேன் பாட்டி"

பூனையின் சுவாசமும், பல்லியின் நகர்வும் ஏற்படுத்தும் மெல்லிய சப்தத்தை தவிர பூரண நிசப்தம்...

சென்னைவாசியான எனக்கு இது மிக புதிது மிக கொடிது கூட...

நான் சமையல் அறையில் நுழைகிறேன்.

இறந்த பாட்டியின் கையில் இறக்காத உயில்.என் பெயரில் எழுதப்பட்ட உயில்.

நான் இதை எதிர்பார்க்கவில்லை.பதற்றம் வெகு விரைவாக என்னை சூழ்கிறது...திடீரென எனக்குள் ஒரு ஆச்சர்யம் சமையல் அறையில் சமையல் சாதனங்கள்,மளிகை சாமான்கள் எதுவும் இல்லை...அறை முழுக்க, ஏன் வீடு முழுக்க ஓவியங்களும் தூரிகைகளும் தான்.

எனக்கு ஓவியங்கள் என்றால் கொள்ளை ப்ரியம்.என்னுள் இருக்கும் என் பாட்டியின் ஜீன் தான் அதற்கு காரணம் என்பது இப்போது புரிகிறது.
நான் தூரிகையை எடுத்து ஓவியம் தீட்ட ஆரம்பிக்கிறேன் உயிலின் மீது...